சென்னை: தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் அழகு குறைந்துவிடும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் நேரடியாக அழகை பாதிக்கும் என்று நம் ஊர்களில் சொல்லப்படுவது உண்டு. ஆனால் உண்மையில் இது கட்டுக்கதை. அதில் உண்மையில்லை. மாறாக தாய்ப்பால் கொடுப்பது பெண்களை மார்பக புற்றுநோயில் இருந்து காக்கும் என்று நிபுணர்கள் சொல்கின்றனர். அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
ஆண்களாக இருந்தாலும் சரி.. பெண்களாக இருந்தாலும் சரி.. அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது உண்டு. இதில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. மற்றவர்களின் கண்களில் அழகாக தோன்ற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் சிறுவயது முதல் முதுமை பருவம் வரை இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இதனால் தான் அனைவரும் தங்களுக்கு ஏற்ப ‛மேக்அப்' செய்து உடல் அழகை மெருகேற்றி கொள்கிறார்கள். இருப்பினும் வயது அதிகரிக்க அதிகரிக்க நம் உடல், தோற்றத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இதனை எந்த காரணம் கொண்டும் தடுக்கவே முடியாது இது ஆண், பெண் என 2 பேருக்கும் பொருந்தும்.
இதற்கிடையே தான் நம் ஊர்களில் ஒரு தகவல் பரவி கிடக்கிறது. அது என்னவென்றால் தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் அழகு குறைந்து விடும். மார்பகங்கள் பெரிதாகி விடும் என்று சொல்வது உண்டு. இதனால் பல பெண்கள் அஞ்சி அஞ்சியே தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறார்கள். மேலும் குறிப்பிட்ட மாதத்துக்கு பிறகு தாய்ப்பால் கொடுப்பதை கூட சிலர் நிறுத்தி விடுகின்றனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் தாய்ப்பால் கொடுப்பது என்பது பெண்களின் அழகை எந்த விதத்திலும் பாதிக்காது என்கின்றனர் டாக்டர்கள். அதுமட்டுமின்றி தாய்ப்பால் குழந்தைக்கு வயிற்று பசியை போக்குவதோடு, உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. அதுமட்டுமின்றி தாய்க்கும், குழந்தைக்கும் இடையேயான பிணைப்பை அதிகரிக்கிறது.
மேலும் தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகம் பெரிதாகும் என்பது எல்லாம் கட்டுக்கதை தான். பொதுவாக மார்பகங்களின் அளவு என்பது அவர்களின் ஜீன்கள் மற்றும் வயதுக்கு வயது உடலில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்தது தான் என்று கூறப்படுகிறது. இதனால் தாய்ப்பால் கொடுப்பது மட்டுமே அதற்கு காரணமாக மாறிவிட முடியாது என்கின்றனர் டாக்டர்கள்.
அதுமட்டுமின்றி, பெண்கள் தற்போது மார்பக புற்றுநோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவது குறைவு என்று பல ஆய்வுகள் கூறி உள்ளன. குழந்தை இல்லாத பெண்களை ஒப்பிடும்போது குழந்தை பெற்றெடுத்து முறையாக தாய்ப்பால் கொடுத்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு குறைவாகவே உள்ளதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
இதனால் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதில் தயக்கம் காட்ட வேண்டாம். அவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி தாய்ப்பாலை தானமாக கூட வழங்கலாம். தற்போது பெரிய பெரிய நகரங்களில் தாய்ப்பால் தானம் கொடுக்கும் மையங்கள் உள்ளன. இந்த மையங்களுக்கு சென்று தாய்ப்பால் தானமாக கொடுப்பதன் மூலம் தாயை இழந்த பச்சிளம் குழந்தைகளுக்கு அது பேருதவியாக இருக்கும் என்கின்றனர் டாக்டர்கள்.



Click it and Unblock the Notifications



