
காதலிக்கும் தருணங்கள் மிக இனிமையானவை. சின்ன சின்னதாய் அழகிய பரிசுப் பொருட்கள், மாலை நேர சந்திப்புகள், பட்டும் படாமலும் அருகாமையில் பயணிக்க நேரும் தருணங்கள், கண நேர சந்திப்புகளிலும் காவியம் பேசும் பார்வைகள், எதிர்பாராது நிகழும் ஸ்பரிசங்கள் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்க வைக்கும்.
காதல் மொட்டாக மலர்ந்து, திருமண பந்தத்தில் மணம் வீசும் மலராகி, வருடங்கள் ஆன பின்னும் என்றும் உதிராது நிரந்தரமாக இருக்க வேண்டும். அந்த காதல்தான் உண்மையானது. அத்தகைய காதலை வெற்றியாக்கி திருமண வாழ்க்கையிலும் சாதிக்க சில
யோசனைகள்:
மனதளவில் தயாராகவேண்டும்
திருமணத்திற்கு மனதளவில் தயாரான பிறகே காதலை திருமணத்திற்குரிய கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். அதுவரை காதலிப்பதில் தவறில்லை.
தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். மற்றவர்களின் நிர்பந்தத்திற்கு பயந்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
வாழ்க்கைத்துணையின் பழக்க வழக்கங்கள், குணாதிசயங்கள், ரசனைகள் இவையெல்லாம் கடைசி வரை ஒத்துப்போகுமா? என்று பார்க்க வேண்டியது அவசியம்.
இயல்பாய் இருங்கள்
காதலிக்கும் நபர்கள் இயல்பான குணத்துடன் பேசிப்பழகுங்கள். முதலில் இயல்பை மறைத்துவிட்டு திருமணத்திற்குப்பின்னர் இயல்பான குணம் வெளிப்படும் போதுதான் பிரச்சினை உருவாகிறது.
வாழ்க்கை பந்தத்தில் இவருடன் இணைந்தால் சரிவராது என்று மனதில்பட்டால், உடனே பக்குவமாக பேசி உறவை முறித்துக்கொள்வதில் தவறில்லை.
நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உங்கள் துணையுடன் திருமணத்திற்கு முன்பே பேசிவிடுவது சிறந்தது. திருமணத்திற்கு பிந்தைய குழப்பங்கள் ஏற்படுவதை இது தவிர்க்க உதவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றியும், அவர்களின் குணாதிசயங்களைப்பற்றியும் காதலிக்கும் போதே பேசிவிடுவது மிகவும் முக்கியம்.
காதல் என்பது எதுவரை
தன்னை விரும்பும் ஆண் உலகத்திலேயே தன் மீது மட்டும்தான் அதிக அளவில் காதல் கொண்டவனாக இருக்க வேண்டும் என்பது பெண்களின் அதிக பட்ச எதிர்பார்ப்பு.
காதலில் பெண்கள், உள்ளத்திற்கே முதலிடம் தருகிறார்கள். ஆண்கள், அழகிற்கே முக்கியத்துவம் தருகின்றனர்.
காதலிக்கும் பொழுது இருந்த ஆத்மார்த்தமான நெருக்கம், கல்யாணமாகி இரு குழந்தைகள் பிறந்ததும், குறைந்து விடுகிறது. எனவே காதலை உடல் ரீதியாக அணுகுவதை விட உள்ளரீதியாக அணுகுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.
யாராக இருந்தாலும் நூறு சதவிகிதம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாது. நம்முடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் எண்பது சதவிகிதம் ஒத்துப்போகும் நபர் நமக்கு துணையாய் அமைந்தால் மணம் முடித்து வாழ்க்கைப் பயணத்தை இனிதாக தொடங்குவதில் தவறில்லை.



Click it and Unblock the Notifications



