•  

கண்களைப் பார்த்து சொல்லுங்கள் ஐ லவ் யூ!

The Best way to say I Love You
 
“சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது” என்று காதலைப் பற்றி கவிஞர் வைரமுத்து அழகாய் கூறியிருக்கிறார். காதலில் விழுவதை விட, காதலை உணர்த்துவதே மிக மிக முக்கியமான விஷயமாகும். அதனை சரியாக செய்யாத காதலர் தோல்வியைத்தான் அடைவார்கள் என்கின்றனர் காதல் நிபுணர்கள்.

என்னதான் இன்டர்நெட், இ மெயில் என தொழில்நுட்பம் முன்னேறியிருந்தாலும் காதலை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சந்தித்து பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு, ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து தொலைத்தவர்களும் உண்டு. காதலி திருமணப்பத்திரிக்கையை நீட்டும் போது சோக கீதம் பாடும் காதலர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். காதலில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் பரிட்சையை ஒத்திவைக்கும் காதலரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த கட்டுரை.

முகம் பார்த்து சொல்லுங்கள்

காதல் தோன்ற ஒரு கணம் போதும் என்பார்கள். அந்த கணத்தில் நேரடியாக முகம் பார்த்து கூறிவிடுங்கள் ஐ லவ் யூ. அப்புறம் பாருங்கள் அதற்கான பதில் பாஸிட்டிவாகத்தான் இருக்கும் ( அடி விழுந்தால் என்ன செய்வது என்று கேட்பது புரிகிறது)

ரசாயன மாற்றங்கள்

கல்லை எறிந்து பார்ப்போம், விழுந்தால் மாங்காய், இல்லாவிட்டால் கல்தானே போகும் என்று அலட்சிய மனப்பாங்குடன் காதலைச் சொன்னால் கண்டிப்பாக தோல்விதான் கிடைக்கும். நீங்கள் உண்மையாக நேசித்து உங்கள் இருவரின் மனதிற்குள்ளும் ரசாயன மாற்றம் சரியாக இருந்தால் உங்கள் காதல் சக்சஸ்தான். தைரியமாக கண்களைப் பார்த்து காதலை சொல்லுங்கள்.

உருகும் முன் உணர்த்துங்கள்

நெருங்கிய நண்பர்கள் போன்ற உறவு இருந்தால் நல்ல முறையில் காதலை உணர்த்துங்கள். சரியான நேரத்தில் சொல்லப்படாத காதல் வெற்றியை நோக்கு செல்வதே இல்லை. காதல் ஐஸ்கிரீம் மாதிரி. உருகுவதற்குள் சொல்லிவிட வேண்டும். இல்லை என்றால் காலி கப் தான் கையில் மிஞ்சும்.

முதலில் தொடங்குங்கள்

பல இடங்களில் காதலை வெளிப்படுத்தாமலேயே காதல் முடிந்து விடுவது உண்டு. இதற்கு காதலர்கள்தான் காரணம். இருவருக்கும் பிடித்திருந்தாலே பரஸ்பரஸ் ஒரு மின்சார அதிர்வுகள் கண்டிப்பாக இருக்கும். காதலை சொல்ல தயக்கம் காட்டாமல் முதலில் காதலை வெளிப்படுத்துங்கள். எதிர்பாராத தருணத்தில் கையை அழுத்தி கடைசி வரை கூட வருவாயா? என்று கேளுங்கள். காதலை சொல்ல அதிகம் தாமதித்தால் காதல் கல்யாணத்தில் முடியாது, உங்கள் காதலிக்கு கல்யாணம் ஆவதில்தான் முடியும்.

போரடிக்காதீர்கள்

காதலை சொல்கிறேன் பேர்வழி என்று போரடித்து விடாதீர்கள். தன்னம்பிக்கையான வார்த்தைகளால் அவரின் மனதில் இருக்கும் காதலை தட்டி எழுப்புங்கள். என் வாழ்க்கைப் பயணத்தில் நீ துணையாக வந்தால் இனிமையானதாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கவிதையாய் கூறுங்கள். உங்கள் காதல் தோட்டத்தில் ரோஜா மலரும்.

தைரியம் வேண்டும்

எந்த ஒரு காதலியுமோ கிரியேட்டிவான, தைரியமான ஆளைத்தான் விரும்புவார்கள். காதலை சொல்வதற்கு கூட தைரியம் வேண்டும். அப்பொழுதுதான் கடைசிவரை எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் போரடி ஜெயிக்க முடியும். எனவே தைரியமாக காதலை சொல்லுங்கள். உங்கள் மீது காதலே இல்லையென்றாலும் உங்களின் தைரியத்திற்காவது கொஞ்சம் யோசிக்கலாம்.

நீங்கள் தயாரா?

தொலைபேசி, எஸ்எம்எஸ்கள், ஈமெயில், காதல் அட்டைகள் என எத்தனையோ வழிகள் இருந்தாலும் காதலை சொல்ல முதலில் நீங்கள்தான் தயாராக வேண்டும். காதலை சொல்ல முடிவெடுத்த பின்னர், அதனை தெளிவாக குழப்பாமல் தைரியமாக சொல்ல வேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம் என்கின்றனர் காதல் நிபுணர்கள்.

English summary
Have you ever felt at a loss for words or ways to describe your feelings for your partner? At some point in any relationship the need for a sentimental or unique way to say I love you comes up. In the middle of your partner's conversation with someone else, lean over and whisper I love you in their ear.
Story first published: Thursday, April 12, 2012, 15:24 [IST]

Get Notifications from Tamil Indiansutras