கால்கள் வறண்டிருந்தாலோ, முடிகள் அதிகமிருந்தாலோ அவற்றின் அழகு பாதிக்கப்படும். கால்களுக்கு வேக்ஸிங், சேவிங் எல்லாம் நிரந்தர தீர்வினை தராது. கவர்ச்சியான கால் அழகினைப் பெற அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.
சிலருக்கு வெயிலினால் கால்கள் வறண்டு போய் சொற சொறப்பாக இருக்கும். ஒரு கரண்டி தயிரில் ஒரு ஸ்பூன் சீனி கலந்து கால் பாதங்களில் தேய்த்து 10 நிமிடம் கழித்து அலசவும். பாதங்களில் உள்ள இறந்து போன செல்கள் உதிர்ந்து விடும். அதேபோல் நன்கு பழுத்த ஆப்பிளை தோலுடன் அரைத்து கை, கால்களில் பூசிக்கொள்ளலாம் இதனால் சரும வறட்சி நீங்கும். பப்பாளிப்பழ துண்டுகள், சிறிது சீனி சேர்த்து கை, கால் முட்டிகளில் தேய்க்கவும்.
தர்பூசணி பழத்தின் அடியில் இருக்கும் வெள்ளை பகுதியினை எடுத்து நன்கு அரைத்து அதை கால்களுக்கு தேய்க்கலாம் இதனால் கால்கள் மென்மையாகும். அதேபோல் சிறிது பால்பவுடர், சிறிதளவு ஓட்ஸ் தூள் கலந்து அதை ஊறவைத்து நன்கு கலந்து தேய்க்கலாம். இதனால் வறண்ட கால்கள் மென்மையாகும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது கல் உப்பு போட்டு 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு மென்மையாக ஸ்கிரப்பர் வைத்து தேய்க்கவும். தொடர்ந்து இப்படி செய்வதால் தோல்கள் உதிர்ந்து ஸ்மூத்தாகும். பிறகு பாதங்களை துடைத்துவிட்டு கால் பாதங்களுக்கு தடவும் கீரிமை போடவும்.
தினமும் இரவு படுக்கும் முன்பு கை, கால் முட்டிகளில் ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் தடவி மசாஜ் செய்துவிட்டு உறங்கலாம் இதனால் கை, கால் முட்டிகளில் உள்ள கருமை நீங்கும். அரிசிமாவு பொடி, சீனி, எலுமிச்சை சாறு கலந்து ஸ்கிரப் செய்யவும்.அலசிய பிறகு புதினா சாறு, தேன், தயிர் கலந்து தடவி 10நிமிடம் ஊறவைத்து வெது வெதுப்பான நீரில் அலசவும் கால்களில் கருமை போய்விடும்.
நாம் உபயோகிக்கும் செருப்புகள் கடினமாக இருந்தால் கால்களிலும் பாதங்களிலும் வலி அதிகமாக இருக்கும். எனவே வீட்டில் இருக்கும் பொழுதும் வெளியில் செல்லும் போதும் மென்மையான செருப்பை பயன் படுத்தவும்.