
மாரடைப்பு வந்த பலரும், இனிமேல் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாது. அப்படி செய்தால் இதயத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என அஞ்சி செக்ஸ் வாழ்க்கைக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு. உண்மையில், செக்ஸ் வாழ்க்கையை தொடர்ந்து வழக்கம்போல தொடர வேண்டும். அப்படி செய்து வந்தால், அடுத்த அட்டாக் வருவதை பெருமளவில் குறைக்க முடியும் என்பது நிபுணர்களின் வாதம்.
வாஷிங்டனில் அமெரிக்க இருதவியல் கழகத்தின் மாநாட்டில் இது தெரிவிக்கப்பட்டது. முதல் முறை மாரடைப்பு ஏற்பட்டவர்கள், அதிலிருந்து மீண்டு வந்த பின்னர் இயல்பான செக்ஸ் வாழ்க்கைக்கு வேகமாக திரும்ப வேண்டும். இது அவர்களது மன அழுத்தங்களைக் குறைக்க உதவும். மேலும் லேசான உடற்பயிற்சிகளையும் அவர்கள் செய்ய வேண்டும்.
முதல் முறை மாரடைப்பு ஏற்பட்டவர்கள் அதிக அளவில் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடுமாறு டாக்டர்களும் பரிந்துரைக்க வேண்டும் என்றும் அந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. மேலும் செக்ஸ் உறவு கொண்டால் மாரடைப்பு வரும் என்று நினைப்பதும் தவறு என்பதையும் டாக்டர்கள் விளக்க வேண்டும்.
இதுதொடர்பான ஆய்வில் 1600 நோயாளிகள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்ட ஆண், பெண்களுக்கு இயல்பான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட வேண்டும், அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதுகுறித்து டாக்டர்கள் அறிவுரை கூறினர்.
மாநாட்டில் கலந்து கொண்ட லிண்டா என்ற மருத்துவர் கூறுகையில்,
மாரடைப்புக்குப் பின்னர் செக்ஸ் உறவு கொண்டால் இறந்து விடுவோம் என்று நினைப்பது தவறாகும். இது அவர்களை மட்டுமல்லாமல், அவர்களின் பார்ட்னர்களையும் பாதிக்கும்.
மாரடைப்பு ஏற்பட்டவர்கள் மாடிப்படிகளில் ஏற முடியும். லேசான உடற்பயிற்சியையும் செய்ய முடியும். அதேபோல செக்ஸ் வாழ்க்கையிலும் ஈடுபட முடியும்.
மேலும் உடலுறவின்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவதற்கு, மிக குறைவான சாத்தியக்கூறுகளே உள்ளன.
ஒரு மனித வாழ்க்கையில் செக்ஸ் உறவு என்பது மிக முக்கியமான பகுதியாகும். உண்மையில் இருதயப் பிரச்சினை உள்ளவர்களில் பெரும்பாலானோர் செக்ஸில் அதிக நாட்டம் உடையவர்களாகவே உள்ளனர். ஆனால் அதில் ஈடுபடத்தான் தயங்குகிறார்கள்.
எனவே உங்களுக்கு இருதயப் பிரச்சினை இருந்தாலும் கூட நீங்கள் உங்களது செக்ஸ் வாழ்க்கையை இயல்பாக அனுபவிக்க முடியும், தொடர முடியும் என்றார்.



Click it and Unblock the Notifications



