மரியாதை நிமித்தமாகவும், அன்பை வெளிப்படுத்துவதாகவும் மலர்களைக் கொடுப்பது உலகெங்கும் ஆண்டாண்டு கால வழக்கமாக உள்ளது. பிறந்தநாள், திருமணநாள், என விசேச தினங்களிலும், பரிசாகவும் கொடுக்கும் மலர்களின் வண்ணம் ஒவ்வொன்றுக்கும் ஓர் அர்த்தம் உண்டு. அது நம் எண்ணங்களை வெளிப்படுத்துபவை. பண்டைய காலத்தில் மனிதர்களின் உணர்வுகளை மலர்களின் மூலமே வெளிப்படுத்தியுள்ளனர். பூக்களின் அர்த்தம் பற்றி ஃப்ளோரியா கிராபி மூலம் தெரிந்து கொள்ளலாம். பலவிதமான மலர்கள் அதைப் பெறுபவர் களுக்கு உரிய ஒரு தனியான செய்தியையும் வெளிப்படுத்துகின்றன.
நேசத்தை உணர்த்தும் மலர்கள்
ரோஜா மலர்கள், நான் உன்னை விரும்புகிறேன் என்பதைத் தெரிந்துகொள்’ என்பதை வெளிப்படுகிறது. ஆர்க் கிட் மலர்கள், நீ என் இதயத்தில் இருக்கிறாய்’ என்றும், ஸ்னேப் டிராகன்ஸ், நான் உன்னை விரும்புகிறேன்’ என்றும் நம்முடைய எண்ணங்களை மலர்கள் வெளிப்படுத்துகின்றன. ப்ளு பெல் மலர்கள், காதலுக்கு என்றும் முடிவில்லை என்று உணர்த்துகின்றன. காக்டஸ் மலர்கள் காதலையும், அபரிமிதமான நேசத்தையும் உணர்த்துகின்றன. டூலிப் மலர்கள், நான் உன்னை விரும்புவதை அறிவிக்கிறேன்’ என்றும் சொல்கின்றன.
அழகாய் இருக்கிறாய்
கார்னேஷன் பூக்கள், நீ அழகாக இருக்கிறாய், உன்னைப் பார்த்து நான் பெருமிதம் அடைகிறேன்’ என்றும் தெரிவிக்கின்றன. டெய்ஸி மலர்கள் வெகுளித்தனத்தையும், அழகை ஆராதிப்பதையும் குறிக்கிறது. செம்பருத்தி பரிசளித்தால் உன்னைப் போல் உலகில் பேரழகி யாரும் இல்லை என்று அர்த்தமாம்.
ரொம்ப நல்லவன்
டபோடில் பூக்கள், நீ தைரியசாலி என்பதோடு, நல்லவன்’ என்பதை குறிக்கிறது. சாமந்தி, நான் உனக்கு உண்மையாக இருப்பேன்’ என்பதையும், கிளாடியோலி, உன் குணத்தைக் கண்டு நான் பெருமிதம் அடைகிறேன்’ என்றும், ஐரிசஸ், என் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் அனுப்புகிறேன்’ என்றும், சூரியகாந்திப் பூக்கள், என் எண்ணங்கள் தூய்மையானவை’ என்றும், பேர்ட் ஆப் பாரடைஸ் மலர்கள் திருவிழா, கொண்டாட்டம் ஆகியவற்றை உணர்த்துகின்றன. பட்டர்ஃப்ளை மலர்கள் பரிசளித்தால் என்னை விட்டு விலகிப்போ என்று அர்த்தமாம்.
காதலுக்கு மரியாதை தரும் சிவப்பு
செந்நிற மலர்கள் காதல், மரியாதை, நேசம், தைரியம் ஆகியவற்றையும், இளஞ்சிவப்பு வண்ண மலர்கள் முழுமையான மகிழ்ச்சி, நளினம், நன்றியுணர்வு அல்லது பாராட்டு ஆகியவற்றோடு நேசத்துக்கான விண்ணப்பமாகவும் கருதப்படுகின்றன. கருஞ்சிவப்பு வண்ணம், நேசத்தோடு கூடிய நம்பிக்கை, கற்பு ஆகியவற்றை அறிவிக்கிறது.
வெள்ளை உள்ளம்
பீச் அல்லது பவழ வண்ண மலர்கள் உற்சாகம், ஆசை, மகிழ்ச்சியான அடக்கம், வெட்கம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன. வெள்ளைநிறப் பூக்கள், கள்ளங்கபடமற்ற தன்மை, தூய்மை, ரகசியம் அல்லது மவுனம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன.







